திருப்பரங்குன்றம் டூவீலரில் வந்து ஆசிரியையிடம் 10 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு டூவீலர் வழிப்பறி கும்பல் அட்டகாசம்
திருமங்கலம், ஜூலை 24: பள்ளி முடிந்து, டூவீலரில் வீடு திரும்பிய ஆசிரியையிடம், டூவீலரில் வந்த 2 பேர் 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமங்கலம் அருகே உள்ளது கீழ உரப்பனூர். இங்குள்ள இந்திரா காலனியைச் சேர்ந்தவர் வைரவன். முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி ஜெயராணி(44). கரடிக்கல்லில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து, வீட்டுக்கு டூவீலரில் ஜெயராணி வந்து கொண்டிருந்தார்.
திருமங்கலம்-சோழவந்தான் ரோட்டில் ஊராண்ட உரப்பனூர் விலக்கு அருகே வந்தபோது, பின்னால் டூவீலரில் வந்த ஹெல்மெட் அணிந்த 2 வாலிபர்கள், ஜெயராணி வந்த டூவீலர் மீது முட்டி நிறுத்தினர். அப்போது திடீரென ஜெயராணி அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில், திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிந்து டூவீலர் வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர்.