பயிறு வகைகளில் அதிக விளைச்சலுக்கு டிஏபி கரைசல் மானியத்துடன் கிடைக்கிறது

பழநி, ஜூலை 24: பயிறு வகைகளில் அதிக விளைச்சல் பெற்றிட டி.ஏ.பி. கரைசல் பயன்படுத்த வேண்டுமென வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.பழநி பகுதியில் 10 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள பயிறு வகைகளில் நல்ல தரமான மணிகளை பெற வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, ‘தரமான பயிர்களை பெற்றிடவும், கூடுதல் மகசூல் பெற்றிடவும் டி.ஏ.பி. கரைசலை இருமுறை தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தினை முதல் நாள் 10 லிட்டர் நல்ல தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் மாலை ஊற வைத்த கரைசலில் இருந்து தெளித்த நீரை வடித்து எடுத்து அதனை 190 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலமாக பூக்கும் தருவாயில் ஒரு முறையும் மறுமுறை மேற்கூறிய முறையில் மீண்டும் 10 முதல் 15 நாள் இடைவெளியில் கைத்தெளிப்பான் மூலமாக 200 லிட்டரில் கலந்து தெளிக்க வேண்டும். அதன் மூலம் அதிகப்படியான பூக்களும், திரட்சியான மணிகளும் பெற்று நல்ல விளைச்சலும் பெறலாம். தற்சமயம் டி.ஏ.பி. கரைசல் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரிடம் உரிய மானிய விண்ணப்பம் பெற்று வாங்கி கொள்ளலாம்’ என்றனர்.

Related Stories: