சாணார்பட்டி அருகே சாலை பணியில் தரமில்லை பொதுமக்கள் புகார்
கோபால்பட்டி, ஜூலை 24: சாணார்பட்டி அருகே கருப்புடையான்பட்டியில் சாலை பணி தரமில்லாமல் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சாணார்பட்டி அருகே எமக்கலாபுரம் பஞ்சாயத்திற்குட்பட்டது கருப்புடையான்பட்டி. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவ்வூருக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு எமக்கலாபுரம் பிரிவில் இருந்து கருப்புடையான்பட்டி மற்றும் சிறுமலை அடிவாரம் வரை சுமார் 2 கிமீ தூரத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதில் 7 பாலங்களும் அடங்கும். ஆனால் பாலங்கள் முறையாக கட்டப்படவில்லை, ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை எனக்கூறி கருப்புடையான்பட்டி மக்கள் கடந்த ஜூலை 8ம் தேதி திண்டுக்கல் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அன்று முதல் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் நிறுத்தினர்.
சாலை பணிக்காக இவ்வூருக்கு வந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது சாலை பணி கிடப்பால் பஸ் போக்குவரத்தின்றி மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தவிர பாலங்களின் கீழ் கழிவுநீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலை அமைக்கும் இடங்களில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றவில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நெடுஞ்சாலைத்துறையினர் முறையாக பாலங்களை கட்டியும், முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றியும் சாலை பணிகளை துவக்க வேண்டும். இல்லாவிட்டால் சாலைமறியலில் ஈடுபடுவோம்’ என்றனர்.