எண்ணேகொள் ஜெட்ஏரியில் தூர்வாரும் பணி

கிருஷ்ணகிரி, ஜூலை 24: எண்ணேகொள் ஜெட் ஏரியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் சார்பில் தூர்வாரும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார். வேப்பனஹள்ளி ஒன்றியம் போலுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எண்ணேகொள் ஜெட் ஏரியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் கெப் இன்பரா என்ற தனியார் தொழில் நிறுவனம் சார்பில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் பிரபாகர் துவக்கி வைத்தார். இதேபோல், பிச்சுகொண்டபெத்தனப்பள்ளி ஏரியில் வாங்கிலி நிறுவனம் சார்பில் தூர்வாரும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது வடகிழக்கு பருவ மழை எதிர்நோக்கியுள்ள நிலையில் நீர் நிலைகளில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு தொழில் நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. போலுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எண்ணேகொள் ஜெட் ஏரி 17.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை கெப் இன்பரா தொழில்நிறுவனம் ₹1.95 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இப்பணிகளை தரமாகவும், மழை நீர் சேமிக்கும் வகையிலும் கரைகளை உயர்த்தியும், நீர்வரத்து கால்வாய்கள், நீர் வெளியேறும் பகுதிகளை நல்ல முறையில் தூர்வாரி பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் வாங்கிலி நிறுவனம் சார்பில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிச்சுகொண்டபெத்தனப்பள்ளி ஏரி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர்கள் லூயிஸ் அம்ரோஸ், ரமேஷ், பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், நிர்வாக பொறுப்பாளர்கள் யாதி, ஜோசன், அருள், பிஆர்ஓ சேகர், ஏபிஆர்ஓ மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடியப்பன், ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜ், முகிலன், பணி மேற்பார்வையாளர்கள் திருவேங்கடம், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: