மாநில தலைவர் சஸ்பெண்ட் ரத்து கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிருப்பு போராட்டம்

தர்மபுரி, ஜூலை 24: மாநில தலைவர் சஸ்பெண்ட்டை ரத்து செய்யக்கோரி, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவராக உள்ள இவர், கடந்த மே 31ம் தேதி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை கண்டித்தும் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று மாநிலம் முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஊரக துறை அலுவலர்கள் வேலையை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று வேலையை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகள் ராஜேஸ்வரி, செயலாளர் கோவிந்தன் துணைத் தலைவர் முருகன் மகளிர் அணி சத்யா கலைவாணி, சதீஷ்குமார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், தினசரி நடக்க கூடிய மக்கள் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல் தர்மபுரி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: