திருத்துறைப்பூண்டி, ஜூலை24: திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை, ரூ 5 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்..திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (72). இவர் கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னை யில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டியில் வசித்து வரும் அவரது மருமகன் சுப்பிரமணியனுக்கு மேட்டுப்பாளையம் தெட்சிணாமுர்த்தி வீட்டின் அருகில் வசிப்பவர்கள் போன் செய்து உங்கள் மாமனார் மாடி வீடு திறந்து கிடக்கிறது என்று தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்த சுப்பிரமணியன் விரைந்து சென்று வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை ரூ 5 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர் யாரோ திருடிக் கொண்டு கொல்லைவாசல் வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது.இது குறித்து சுப்பிரமணியன் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள், மோப்பநாய்வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.