திருவாரூர், ஜூலை 24: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் வரும் 29ம் தேதியும், வலங்கைமானில் 30ம் தேதியும் தொழிலாளர்கள் நலவாரிய புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தொழிலாளர் நல உதவி ஆணையர் (பொ) தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தொழிலாளர் துறை மூலம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மற்றும் ஓட்டுநர் நல வாரியங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் வரும் 29ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 30ம் தேதி வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடைபெறுகிறது. எனவே இந்த நல வாரியங்களில் புதிய உறுப்பினராக பதிவு செய்ய விரும்பும் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் (அரசு பணி மற்றும் உழவர் அட்டை இல்லாதவர்கள் மட்டும்) கிராம நிர்வாக அலுவலர் மூலம் உரிய சான்று பெற்று இருப்பிடம் மற்றும் வயது ஆதாரமாக குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்று அசல் மற்றும் சான்றிடப்பட்ட ஜெராக்ஸ் நகல், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் பாஸ்போர்ட் சைஸ் 2, அஞ்சல் வில்லை அளவு 1 மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடனும், ஓட்டுனர் நல வாரியத்திற்கு கூடுலதாக ஓட்டுனர் உரிமம் நகலுடனும் மேற்காணும் முகவரியில் நேரில் ஆஜராகி உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அரசின் நல திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு தொழிலாளர் நல உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.