முத்துப்பேட்டை, ஜூலை24: முத்துப்பேட்டை அருகே பாலம் அமைக்கும் பணி தாமதமாகிறது. இதனால் போக்குவரத்திற்கு மாற்றுப் பாதை அமைக்கப்பட்டது. மழையால் சேதமான மாற்றுப் பாதை சீரமைக்கப்பட்டதால் மக்கள் கிழ்ச்சியடைந்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையிலிருந்து கோவிலூர், சிதாமல்லி, பெருகவாழ்ந்தான் பகுதியை கடந்து செல்லும் மன்னார்குடி சாலை என்பது இப்பகுதி மக்களின் முக்கிய சாலையாகும். இதன் வழியாக தான் சுற்றுப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தொலைதூரம் மற்றும் பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல் இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தினந்தோறும் இவ்வழியாக செல்வது வழக்கம். இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் கோட்டகம் முதல் விளாத்துவெளி கிராமம் வரை நெடுஞ்சாலை துறை சார்பில் 4 பாசன பாலங்கள் கட்ட சமீபத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது நான்கு பாலங்கள் ஒப்பந்தக்காரர்களால் கட்டுமானப்பணி முதலில் முழுவீச்சில் துவங்கியது. பின்னர் ஏனோ ஆமை வேகத்தில் தற்பொழுது பணி நடந்து வருகிறது.இதனால் முன்பு இருந்த பழைய பாலத்தை இடித்த ஒப்பந்தக்காரர்கள் அதற்கு மாற்று பாதை அப்பகுதியில் சாலையோரம் உள்ள வயல்வெளியில் பெயரளவில் ஜேசிபி மூலம் வறட்டி விட்டு பணியை தொடர்ந்தனர். கடந்த 18 ம் தேதி முத்துப்பேட்டை பகுதியில் பெய்த மழையால் இப்பகுதியில் பாலம் கட்டும் அருகே உள்ள முறையாக அமைக்கப்படாத மாற்று பாதைகள் நான்கு இடத்திலும் அதிகளவில் மீண்டும் சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாதளவில் மாறியது. இதனால் மன்னார்குடி பகுதி போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மன்னார்குடி பகுதிக்கு செல்ல சுமார் 15கிமீ சுற்றளவு கொண்ட உதயமார்தாண்டாபுரம், சித்தமல்லி வழியாக பேரூந்துகள் மற்றும் வாகனங்கள் சென்று வந்தது. நேற்று முன்தினம் வரை போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டு உதயமார்தாண்டாபுரம், சித்தமல்லி வழியாக பேரூந்துகள் மற்றும் வாகனங்கள் சென்று வந்தது. இது குறித்து கடந்த 19ம் தேதி மற்றும் 20ம் தேதி இது குறித்து படத்துடன் தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அப்பகுதி பணிகள் நடந்த நான்கு பகுதியிலும் சேறும் சகதியுமாக இருந்த மாற்று சாலைகளை ஜேசிபி வாகனங்கள் கொண்டு சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.