திருச்சி சட்டகல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு நாகையில் பதுங்கியுள்ள காதலனை பிடிக்க தனிப்படை தீவிர முயற்சி

திருச்சி, ஜூலை 24: திருச்சியில் சட்ட கல்லூரி மாணவி மீது காதலன் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் படுகாயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகையில் பதுங்கியுள்ள காதலனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். தீவைத்தது பற்றிய பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் ரம்யா(23). திருச்சி சட்டக்கல்லூரியில் மாலை நேர வகுப்பில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் காஜாமலை முஸ்லிம் தெருவில் உள்ள மாடி வீட்டை வாடகைக்கு எடுத்து சக மாணவிகள் 3 பேருடன் தங்கி கல்லூரிக்கு ெசன்று வருகிறார். இவரும், நாகை மாவட்டம் பொறையார் சந்திரபாடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் தவச்செல்வன் (27) என்பவர் சென்னை தரமணியில் டிராவல்ஸ் வைத்துள்ளார். இந்த டிராவல்ஸில் ரம்யாவின் தோழி வேலை செய்து வருகிறார். ரம்யா தோழியை சந்திக்க சென்றபோது தவச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர் அடிக்கடி காதலனுடன் பேசி வந்தார். கடந்த 6 மாதமாக அவர் தவச்செல்வனிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் திருச்சி வந்த தவச்செல்வன் ரம்யாவின் அறைக்கு சென்று பேசினார். திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். ரம்யாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிவசக்தி என்ற மாணவி கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரம்யாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 40 சதவீதம் தீக்காயமடைந்த ரம்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரம்யாவிடம் கே.கே.நகர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தவச்செல்வன்தான் தீ வைத்ததாக தெரிவித்துள்ளார்.மேலும் விசாரணையில், ரம்யாவுக்கு கடந்த 2016ம் ஆண்டு சிதம்பரத்தை ேசர்ந்த தங்கபாண்டியனுடன் திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த ரம்யா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தோழி மூலம் பழக்கமான தவச்செல்வனை ரம்யா காதலித்து வந்தார். அவரது நடவடிக்கை பிடிக்காததால் கடந்த 6 மாதமாக அவருடன் பேசுவதை ரம்யா நிறுத்திவிட்டார். அதன் பின்னர் தவச்செல்வன் பேச முயற்சித்தும் ரம்யா பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் நேற்று முன்தினம் திருச்சியில் ரம்யா தங்கியுள்ள அறைக்கு வந்தார். அங்கு ரம்யாவின் தோழி சிவசக்தி உடனிருந்தார். அப்போது காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஒரு கட்டத்தில் தவச்செல்வன் ரம்யாவை அடித்து உதைத்து தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவசக்தி உதவிக்கு ஆட்களை அழைக்க மாடியிலிருந்து இறங்கி வந்தார். அதற்குள் தவச்செல்வன் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து ரம்யாவின் மார்பு பகுதி, முதுகு பகுதியில் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

தப்பியோடிய தவச்செல்வன், நாகையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் எஸ்ஐ சுரேந்தர் தலைமையிலான தனிப்படை நாகையில் வலை வீசி தேடி வருகின்றனர். தவச்செல்வன் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் படகில் கடலுக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் கடல் பகுதியில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: