மரக்காணம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

மரக்காணம், ஜூலை 24: மரக்காணம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவு

களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.   மரக்காணத்தில் திண்டிவனம் சாலையில் உள்ளது முருக்கேரி. இங்கு வந்துதான் அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. இதனால் இங்கு காலை முதல் இரவு வரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இங்கு பல கோழிக்கறி கடைகள் உள்ளது. இந்த கடைகளில்  வெட்டப்படும் கோழிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொட்டாமல் ஒரு சிலர் சாலையோரம் கொட்டிவிடுகின்றனர். இது போல் கொட்டப்படும் கோழி கழிவுகளை தினமும் நாய்கள், பன்றிகள் கிளறுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பொது மக்களுக்கு பல்வேறு நோய்களும் உண்டாகும் அபாய நிலை உள்ளது. மேலும் இந்த கோழி கழிவுகள் கொட்டப்படும் வழியாகத்தான் பள்ளி மாணவர்களும் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால் மாணவர்கள் கூட பாதிக்கும் நிலை இருக்கின்றது. கோடைக் காலம் முடிந்து தற்போது மழைக்காலமும் துவங்கிவிட்டது. இப்பகுதியில் மழை பெய்தால் இந்த கழிவுகளில் இருந்து புழுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தும். எனவே இப்பகுதி பொது மக்களின் நலன் கருதி முருக்கேரி பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கோழி கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: