புதுச்சேரி, ஜூலை 24: புதுவையில் கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 மீனவர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுவை, வீராம்பட்டினம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் பிரவீன் (26). தாகூர் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்த காதணி விழாவில் பிரவீன் உணவு பரிமாறும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மீனவர்களான விக்கி, ஸ்டாலின், அபின் ஆகியோருக்கும், பிரவீனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், பிரவீனை அசிங்கமாக திட்டி இரும்பு பைப்பால் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் பிரவீன் முறையிட்டார். அதன்பேரில் வழக்கு பதிந்த எஸ்ஐ புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், விக்கி உள்ளிட்ட 3 மீனவர்களையும் தேடி வருகின்றனர்.