புதுச்சேரி, ஜூலை 24: மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏற்ப மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உள்ளாட்சித்துறை சார்பில் விளம்பரம் வெளியானது. முதல்வருக்கும், உள்ளாட்சி அமைச்சருக்கும் தெரியாமலே அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.இதுகுறித்து நேற்று முன்தினம் சட்டசபையில் இப்பிரச்னையை காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் கிளப்பினர். இதற்கு பதிலளித்த உள்ளாட்சி அமைச்சர் நமச்சிவாயம், கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக 1994ம் ஆண்டு விதிமுறைகள் இருக்கிறது. இந்த விதிகளின்படி அந்த விளம்பரம் வெளியாகவில்லை. முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் தெரியாமல் அறிவிக்கை வெளியாகியுள்ளது.இது எம்எல்ஏக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். சபாநாயகர் அந்த கோப்பை வரவழைத்து ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவரை தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற அதிகாரி பாலகிருஷ்ணனை நியமிக்க வேண்டுமென கடந்த ஓராண்டுக்கு முன் கோப்பு அனுப்பினோம், ஆனால் கவர்னர் ஏற்க மறுத்து வெளியில் இருந்து நியமனம் செய்ய வேண்டுமென திருப்பி அனுப்பினார். அமைச்சரவை பரிந்துரைத்ததை ஏற்று கிரண்பேடி செயல்படவில்லை. தற்போது யாரோ ஒருவருக்கு சாதகமாக கிரண்பேடி தன்னிச்சையாக விளம்பர அறிவிப்பு கொடுத்துள்ளார். எனவே இதன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.