அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள கடையில் பதுக்கி வைத்திருந்த ₹4 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களை கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் தனி குழுக்கள் அமைக்கப்பப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் அவ்வப்போது ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் தலைமையிலான அதிகாரிகள், கோயம்பேடு மார்க்கெட் தானிய மற்றும் உணவுக்கிடங்கு பகுதியில் இயங்கி வரும் கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் சுமார் ஒரு டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், கவர்கள், ஸ்பூன்கள் உள்ளிட்டவை இருப்பது தெரிந்தது. ₹4 லட்சம் மதிப்புள்ள அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சம்மந்தப்பட்ட கடைக்காரருக்கு ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.