பெரம்பூர்: கொருக்குப்பேட்டை பகுதியில் கழிவுநீர் தேக்கம், சிதிலமடைந்த சாலையை சீரமைக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், 41வது வார்டுக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் கருமாரியம்மன் நகர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், பாதாள சாக்கடை அடைப்பால் ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து பலமுறை சாலை மறியல் போராட்டம் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.