பெரும்புதூர், ஜூலை 24: தாம்பரம் - படப்பை வழிதடத்தில் இயக்கப்பட்ட மாநகர பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள், மாணவ, மாணவிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில் மணிமங்கலம், பாரதி நகர், புஷ்பகிரி, காந்தி நகர், அண்ணா நகர், இந்திரா நகர், பெரிய காலனி ஆகிய பகுதிகளில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், படப்பையில் உள்ள அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். மேலும் படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம், வங்கி, கூட்டுறவு வேளாண் வங்கி உள்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்களுக்கு ஏராளமான மக்கள் தினமும் சென்று வருகின்றனர். புஷ்பகிரி பகுதியில் பழம், மலர் வகை, செடிகள் மற்றும் குரோட்டன் செடிகள் பயிரிடப்பட்டு தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.இந்த கிராமத்தில் இருந்து தாம்பரம் வழியாக குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிக்கும் ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர்.தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், மணிமங்கலம், புஷ்பகிரி, காந்தி நகர் வழித்தடத்தில் படப்பை பகுதிக்கு மாநகர பஸ் (தஎ 80) இயக்கப்பட்டன. தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட 2 பஸ்களும் கடந்த ஆண்டுகளுக்கு முன் சாலை பழுதை காரணம் காட்டி முன் அறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டன.