திருவண்ணாமலை, ஜூலை 24: நூறு நாள் வேலைத்திட்ட நிதியில் இருந்து, ஏரிகளை தூர்வாருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கையில் உப்பு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை சார்பில் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பேரவை ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தட்டு, கையில் உப்பு ஏந்தியபடி, நூறு நாள் வேலைத்திட்டத்தை அழிக்காதே, நீர் நிலைகளை இயந்திரத்தின் மூலம் தூர்வார நூறு நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்தாதே என முழக்கமிட்டனர். விவசாயிகளின் இந்த நூதன போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களை தூர்வார ₹1,250 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக, சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதை வரவேற்கிறோம். ஆனால், அதற்கான நிதியை நூறு நாள் வேலைத்திட்டத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தக்கூடாது.