காரைக்குடி, ஜூலை 23: அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களில் ஒவ்வொரு துறையிலும் பத்திற்கு ஒருவர் என்ற விகித்தில் சிறந்த தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தெரிவித்தார்.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2019-20ம் கல்வியாண்டில் முதுகலையில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடந்தது. பதிவாளர் குருமல்லேஷ் பிரபு வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘ அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள 44 துறைகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பல்வேறு துறைசார்ந்த 44 பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் இக்கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். ரூசா 2.0 திட்டத்தின் கீழ் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களில் ஒவ்வொரு துறையிலும் பத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் சிறந்த தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது’ என்றார்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் தனுஷ்கோடி, சுரேஷ்குமார், சந்திரமோகன், பாஸ்கரன், சங்கரநாராயணன், முருகன், மணிமேகலை, அய்யம் பிள்ளை, சரோஜா, தர்மலிங்கம், மதன், ஜோதிபாசு ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். பழனிச்சாமி நன்றி கூறினார்.