சிவகங்கை, ஜூலை 23: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. கடந்த கல்வி ஆண்டிற்கான முழு ஆண்டு தேர்வு விடுமுறை முடிந்து 2019-20ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் 3ல் தொடங்கின. தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் அனைத்தும் பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் முதல் பருவத்திற்கான தொகுதி ஒன்று புத்தகங்கள் வழங்கப்படவில்லை. தொகுதி ஒன்றில் தமிழ், ஆங்கிலம் பாடங்கள் இருக்கும். மொழிப்பாடங்களுக்கு பள்ளி திறந்து இரண்டு மாதங்கள் முடிவுறும் காலம் வரை புத்தகங்கள் வழங்காமல் இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. கல்வி அலுவலகங்களில் புத்தகங்கள் குறித்து தலைமையாசிரியர், ஆசிரியர் கேட்கும் நிலையில், அது குறித்து தங்களுக்கே எந்த தகவலும் வரவில்லை என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.