ராமநாதபுரம், ஜூலை 23: கமுதி அருகே அரியமங்கலம் கிராமத்தில் மாரி மகன் மணிகண்டனை, 7 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை நேற்று முன்தினம் மதுரையில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வழக்கில் கைதான அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் வயது சான்றிதழ்களை இளஞ்சிறார் நீதிக்குழுமத்தின் உறுப்பினரின் சான்று பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர்களுக்கான சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரத்தில் உள்ள இளஞ்சிறார் நீதிக்குழுமத்தின் உறுப்பினர் தசரத பூபதி வீட்டிற்கு, கமுதி டிஎஸ்பி (பொ) முத்துராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, கஜேந்திரன் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட 7 சிறார்களை அழைத்து வந்துள்ளனர். ஆனால் வயதுக்கான சான்றிதழ்களை அளிக்கவில்லை. வயதுக்கான ஆதாரம் இல்லாத நிலையில் 18வயதுக்கு உட்பட்டவர்கள் என சான்று அளிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இரவு நேரம் என்பதால் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முடியாத நிலையில், இரவு முழுவதும் அவரது இல்லத்திலேயே அனைவரையும் தங்க வைத்து போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் இரவோடு இரவாக சிறார்கள் படித்த மதுரை பள்ளிகளுக்கு சென்று வயதுக்கான பள்ளி சான்றிதழை பெற்று வாட்ஸ்அப் மூலமாக அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து 18வயதிற்குட்பட்டவர்கள் என சான்றிதழை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறுவர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.