புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

சத்தியமங்கலம், ஜூலை 23: புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அணையின் மேல்பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு பைப்லைன் வழியாக புஞ்சைபுளியம்பட்டி நகர் பகுதியில் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் 15வது வார்டில் உள்ள காயிதே மில்லத் வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் உடைப்பை சரி செய்தனர். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் அதே இடத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 5 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணானது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அடிக்கடி உடைப்பு ஏற்படும் குழாய்களை சீரமைக்க வேண்டும் என  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: