அணிமூர் மக்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக எஸ்பியிடம் புகார்

நாமக்கல், ஜூலை 23:  திருச்செங்கோடு அருகே உள்ள நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற போராடுபவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாக, எஸ்பி அலுவலகத்தில் அணிமூர் மக்கள் புகார் அளித்தனர்.நாமக்கல் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு, நேற்று திருச்செங்கோட்டை அடுத்துள்ள அணிமூர் கிராம மக்கள் திரண்டு வந்து அளித்த புகார் மனு விபரம்:திருச்செங்கோடு அருகே உள்ள அணிமூர் கிராமத்தில், நகராட்சி குப்பை கிடங்கு கடந்த 16 ஆண்டாக இருக்கிறது. இதனால் கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், இதை அகற்ற வேண்டும் என பல ஆண்டாக போராடி வருகிறோம். இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில், எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. துப்புரவு பணியாளர்களை சாதி பெயரை சொல்லி திட்டுவதாக கூறி, இந்த வழக்குகள் போடப்படுகிறது. துப்புரவு பணியாளர்கள் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், அவர்கள் என்ன சாதி என்பதே எங்களுக்கு தெரியாது. எங்களின் போராட்டத்தை தடுக்கவே, அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் போலீசார் இதுபோன்ற பொய் வழக்குகள் தொடர்ந்து போடப்படுகிறது. எனவே, இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: