ஐசிஎப் பொதுத்துறை நிறுவனத்தில் நவீன ரயில் பெட்டி தயாரிப்பு தொழில்நுட்பம் உள்ளது மஸ்தூர் யூனியன் மாநில தலைவர் பேட்டி

அரியலூர், ஜூலை 23: ஐசிஎப் பொதுத்துறை நிறுவனத்தில் நவீன ரயில் பெட்டி தயாரிப்பு தொழில்நுட்பம் உள்ளது என்று சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் மாநில தலைவர் ராஜா தர் கூறினார்.அரியலூரில் தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் அரியலூர் மற்றும் ரங்கம் கிளைகள் சார்பில் சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் மாநில தலைவர் ராஜா தர் பங்கேற்றார்.முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்க முயற்சிப்பது கண்டிக்கதக்கது.இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நவீன ரயில் பெட்டிகளை குறைந்த செலவில் தயார் செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவில் ரயில் பெட்டி தயாரிக்கும் ஐசிஎப் பொதுத்துறை நிறுவனத்துக்கு உள்ளது. ஆனால் மத்திய அரசு அதிக விலைக்கு வெளிநாட்டிற்கு கொடுப்பது இந்தியாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தையும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களையும் நலிவடைய செய்யும் செயலாகும். வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.ரயில்வேதுறை பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கோ அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கோ பயனளிக்கும் வகையில் எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. ரயில்வேதுறைக்கு ரூ.80 லட்சம் கோடி தேவையென கூறப்பட்டுள்ளது.ஆனால் அந்த பணம் எங்கிருந்து வரும் என்று கூறவில்லை. இதெல்லாம் காகிதத்தில் மட்டுமே உள்ளது. ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தொகை அறிவிப்பு இல்லை. அனைத்தும் அறிவிப்பாகவே உள்ளது. ரயில்வே துறையில் 2 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கூறுகிறார்.ஆனால் ரயில்வே கேட்கீப்பர் வேலைக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: