சங்கரன்கோவில், ஜூலை 23: சங்கரன்கோவில் ஏவிகே இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவ, மாணவிகளுக்காக திறன் மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி சேர்மன் அய்யாத்துரைபாண்டியன் தலைமை வகித்து பேசினார். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சுப்பிரமணியன், மெட்ரிக். பள்ளி முதன்மை முதல்வர் ஜெகநாதன், முதல்வர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி விஜயலெட்சுமி விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஓய்வுபெற்ற பேராசிரியை ஜெயந்த பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறன் மேம்படுத்துதல் குறித்து பேசுகையில், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கனவுகளால் ஆனது. நமது மனதின் எண்ணங்களே கனவுகளாக மாறுகிறது. அந்த கனவை நிறைவேற்றுவது, உங்கள் கையில்தான் இருக்கிறது. கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை கண்டிப்பாக நிறைவேற்ற முடியும். மாணவர்கள் நல்ல நண்பர்களை தேடிக்கொள்ள வேண்டும். நண்பர்களை பொறுத்தே மாணவர்களின் கல்வி தரமும், வாழ்க்கையும் அமையும். இவ்வாறு பேசினார். கருத்தரங்கில் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.