திருநின்றவூரில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பெண் பரிதாப பலி

திருநின்றவூர், ஜூலை 19: ஆவடி அருகே திருநின்றவூரில் சிமென்ட் சிலாப் உடைந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்தார்.ஆவடியை அடுத்த திருநின்றவூர், நத்தமேடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் சம்பத். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதற்கிடையில் நேற்று காலை 10மணி அளவில் சம்பத் பொருட்களை வாங்க கடைக்கு சென்று விட்டார். மேலும், மகனும், மகளும் வீட்டில் இல்லை. பின்னர், வீட்டில் விஜயலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இவர் வீட்டு முன் பகுதியில் இருந்த கழிவுநீர் தொட்டியின் மேற்பகுதியை துடைப்பத்தால் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சிலாப் உடைந்து கழிவுநீர் தொட்டியில் விஜயலட்சுமி விழுந்து உள்ளார். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து சம்பத் வீடு திரும்பினார்.

அப்போது வீடு திறந்து கிடந்து உள்ளது. அங்கு,  விஜயலட்சுமியை காணவில்லை. இதனையடுத்து, அவர் வீடு முழுவதும் விஜயலட்சுமியை  தேடிப் பார்த்தார். அப்போது வீட்டின் முன் பகுதியில் இருந்த கழிவுநீர் தொட்டியின் சிமென்ட் சிலாப் உடைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஏணி மூலம் கழிவுநீர் தொட்டியின் உள்ளே இறங்கி பார்த்துள்ளார். அங்கு,  விஜயலட்சுமி  தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பத் கதறி அழுதுள்ளார். தகவலறிந்து திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமெண்ட் சிலாப் உடைந்து கழிவுநீர் தொட்டியில் பெண் விழுந்து இறந்த சம்பவம்  நத்தம்பேடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: