திருவண்ணாமலை, ஜூலை 19: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி 3ம் வகுப்பு மாணவி 289 நொடிகளில் 150 திருக்குறளை சரளமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்தார். அவருக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உலக சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள காவேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனைக்குட்டி(31), இவரது மனைவி சத்யா(28). விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் தர்ஷினி(8), கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் திருக்குறள் வாசித்து, ஒப்புவிப்பதை ஊக்குவித்து வந்தனர். அதன்படி தர்ஷினி 1ம் வகுப்பு படிக்கும் போது மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் 5 நிமிடங்களில் 27 திருக்குறள் ஒப்புவித்தார். இதனை பார்த்த ஆசிரியர்கள் அவருக்கு கூடுதல் பயிற்சி அளித்தனர். இதன் அடிப்படையில் தர்ஷினி 2ம் வகுப்பு படிக்கும் போது 4 நிமிடங்களில் 110 திருக்குறள் ஒப்புவித்தார். தற்போது, 3ம் வகுப்பு படித்து வரும் நிலையில் 5 நிமிடங்களில் 150 திருக்குறள் ஒப்புவிக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.