உடுமலை ஜூலை 18: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக 14 அடி அளவிலேயே நீடிக்கிறது. இதனால் இந்த அணையை நம்பியுள்ள விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அணையின் மூலம் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் நான்கு மண்டலமாக சுழற்சி முறையில் திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் பெற்று வருகின்றன. மூன்றாம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை தண்ணீர் திறக்கப்பட்டது. நான்காம் மண்டல பாசனத்திற்கு ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக 14 அடி அளவிலேயே நீடிக்கிறது. இதனால் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.பிஏபி பாசனத் திட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சோலையாறு,பரம்பிக்குளம்,பெருவாரிப்பள்ளம்,ஆழியார் சர்க்கார்பதி உள்ளிட்ட பகுதிகளில் பருவ மழை பொய்த்ததால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரத்து அறவே நின்று போனது. சர்க்கார்பதி பவர்ஹவுசில் இருந்து 46 கிலோ மீட்டர் காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பருவமழை இந்த வருடம் இதுவரை துவங்காததால் வனப்பகுதிகளில் மட்டுமின்றி சமவெளிப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.