சிவகாசி, ஜூலை 18: வெம்பக்கோட்டை தாலுகாவில் கனஞ்சாம்பட்டி, விளாமரத்துபட்டி, மீனாட்சிபுரம் கிராம சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே, வெம்பக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. இந்த தாலுகாவில் உள்ள கிராமங்களில் சாலை வரிவாக்கம், புதிய சாலைகள், பாலங்கள் என எந்தவித அடிப்படை கட்டமைப்பு பணிகளும் நடைபெறவில்லை. வெம்பக்கோட்டையைச் சுற்றியுள்ள பல முக்கிய மாவட்ட சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், புதிய சாலைகள் அமைக்கும் பணிகளும் நடைபெறாததால் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்றதாக உள்ளது.வெம்பக்கோட்டை தாலுகா துவங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதி பணி நடக்கவில்லை. ஒன்றியமாக இருந்தபோது எப்படி இருந்ததோ; அதைக் காட்டிலும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தாலுகாவில் 48 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்துகளில் பல கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், சாலைகளில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை விளக்குகள், வழிகாட்டி போர்டுகள், விபத்து தடுப்பு எச்சரிக்கை போர்டுகள் முறையாக வைக்க படவில்லை. இதனால், சாலைகளில் வாகனங்களில் செல்வோர் பலர் விபத்தில் சிக்கி, உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகிறது.