ராஜபாளையம், ஜூலை 18: ராஜபாளையத்தில் பஸ்நிலையம் எதிரே, ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால், அடையாளம் இழந்து வரும் கண்மாயில் குடிமராமத்து பணி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையத்தில் புதிய பஸ்நிலையம் எதிரே புதியாதி கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மூலம் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்நிலையில், கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளன. நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இக்கண்மாயில் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீரில் கொசுக்கள் உருவாகின்றன. கண்மாயில் கழிவுநீர் கலப்பதால், நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. இதனைச் சுற்றியுள்ள கிணறுகள், ஆழ்குழாய்களில் உள்ள நீரின் தன்மை மாறுகிறது. கண்மாய் நீரை குடிக்கும் ஆடு, மாடுகளுக்கும் நோய் ஏற்படுகிறது. இதனை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.