கண்ணமங்கலம் அருகே பரபரப்பு தனியார் பள்ளி பஸ்சில் 8 அடி சாரை பாம்பு மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

கண்ணமங்கலம், ஜூலை 18: கண்ணமங்கலம் அருகே தனியார் பள்ளி பஸ்சில் 8 அடி நீள சாரை பாம்பு பிடிப்பட்டது. கண்ணமங்கலம் அடுத்த புதுப்பாளையம் கூட்ரோடு அருகே செயல்படும் தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களை அழைத்து சென்றுவிட பள்ளி சார்பில் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை ஒண்ணுபுரம் ரயில் நிலையம் அருகே தேவாங்கபுரத்தில் இருந்து வழக்கம்போல் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டது. அப்போது, டிரைவர் இருக்கை அருகே இருந்து சுமார் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று திடீரென வெளியே வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து, டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். மாணவர்கள் அலறியடித்து கொண்டு பஸ்சின் பின்புற வழியாக இறங்கினர். பின்னர், பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு பாம்பு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு அலைத்து செல்லப்பட்டனர். பள்ளி பஸ்சில் பாம்பு பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: