அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி

திருவண்ணாமலை, ஜூலை 16: அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் திருவண்ணாமலையில் உள்ள காமராஜர் சிலைக்கு நேற்று அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும் வழங்கினார்.பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிக்கு நிகராக தரத்தை உயர்த்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் தற்போது நடந்து வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னாலே தீர்க்கதரிசியாக காமராஜர் அணை கட்டுதல், ஏரிகளை தூர்வாருதல், பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தண்ணீர் பஞ்சமின்றி தமிழ்நாடு காணப்பட்டது. தற்போது மழை பொய்த்து விட்ட காரணத்தால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஆகவே அந்தந்த மாநில அரசுகள் காமராஜரின் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் நிச்சயமாக வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் பாடுபடும்.

Related Stories: