புதுக்கோட்டை, ஜூன்19: குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள் குறித்து மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில்,குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் கல்வி, உடல்நிலை, மருத்துவம், விடுதி சேர்க்கை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையான புகார்கள் மற்றும் குறைகளை கேட்டு தீர்வு காணுதல் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குழு அமர்வானது வருகிற 21ம் தேதி ஒரு நாள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இந்த குழு அமர்வில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 10 மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகளின் குறைகள் தொடர்பான புகார்களை கேட்டறிந்து அதற்கான தீர்வு வழங்கப்படும்.