திருமயம் அருகே பராமரிப்பில்லாத வீட்டின் மேற்கூரை இடிந்தது

திருமயம், ஜூன் 19: திருமயம் அருகே சமத்துவபுரம் வீடு மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் தாய், குழந்தைகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே துளையானூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் கண்ணன் மனைவி போதும்பொண்ணு. கணவன் வெளியில் வேலைக்கு சென்ற நிலையில் தனது 5 வயது, 1 வயது குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். போதும்பொண்ணுவின் முதல் மகன் அருகிலுள்ள பள்ளியில் படிப்பதால் அவனை பள்ளியில் விட்டுவிட்டு காலை 9 மணியளவில் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பள்ளியில் குழந்தையை விட்டுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டருகே அக்கம் பக்கத்தினர்கூடி நின்றதை கண்டு குழம்பி போனார். இந்நிலையில் விரைந்து வந்து கூடி நின்றவர்களிடம் போதும்பொண்ணு விசாரித்தபோது வீட்டிற்குள் சத்தம் கேட்டதாக தெரிவித்தனர். இதனால் பதற்றமடைந்த போதும்பொண்ணு பூட்டியிருந்த வீட்டை திறந்து பார்த்த போது கான்கிரீட் வீட்டின் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனிடையே 10 நிமிடங்களுக்கு முன்னர் குழந்தையை பள்ளியில் விட வீட்டைவிட்டு வெளியேறியதால் பெரும் விபத்திலிருந்து தப்பித்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் போதும்பொண்ணுக்கு ஆறுதல் கூறினர்.

20 ஆண்டுகளில் அனைத்து வீடுகளும் சேதம் இது பற்றி அப்பகுதியினரிடம் கேட்டபோது, 1999ம் ஆண்டு திருமயத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் ஏற்படுத்தப்பட்டு வீடில்லா ஏழைகளுக்கு சுமார் 100 வீடுகள் கட்டு கொடுக்கப்பட்டது. இதனை இதில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளனர். இலவசமாக அரசு கட்டி கொடுத்த வீட்டை பராமரிக்க போதுமான வருவாய் இல்லாததால் வீடுகள் சேதமடைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சமத்துவபுரத்தில் உள்ள அனைத்து வீடுகளும் பெரும்பாலும் 50 சதவீத சேதமடைந்தது. எனவே அதிகாரிகள் திருமயம் சமத்துவபுரத்தில் உள்ள அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்து அடுத்த வீடுகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க அப்பகுதியில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் இன்று நடந்த விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது என்றனர்.

Related Stories: