கடலூர், ஜூன் 18: கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் மக்கள் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென கோரி கட்சி சார்பில் நடத்தப்பட இருந்த பிரசார இயக்கத்திற்கு காவல்துறை தடை விதித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலர் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்திட வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்யவும், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கவும் காவல்துறை அனுமதிக்கவில்லை. ஜனநாயக வழியிலான பிரசாரங்களை தடுக்கும் முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் பல இடங்களில் பிரசார இயக்கம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பிரசார இயக்கத்தை நடத்த முடியாமல் தடை செய்து, மிரட்டும் காவல்துறையின் அணுகுமுறை சரி இல்லாமல் உள்ளது. எனவே கட்சி சார்பில் நடைபெறும் ஜனநாயக பூர்வமான இயக்கங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.