கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த முடிவு

மஞ்சூர், மே. 24:  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குடும்பத்துடன் போராட்டம் நடத்த சாலை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம் மஞ்சூரில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கனகரத்தினம், பொருளாளர் பத்மநாதன், ஊட்டி வட்டகிளை தலைவர் ராமமூர்த்தி, குந்தா வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், கோத்தகிரி வட்ட தலைவர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சாலை பணியாளர்களின் 41மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன் வழங்க வேண்டும். மேலும் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியர்களுக்கான ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு வேலை நிதியில் ஊதியம் வழங்குவதை கைவிட்டு அரசின் பொது நிதியில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு 13 ஆண்டாக பணி வழங்காமல் உள்ளது. வாரிசுப்பணி வழங்க தடையாக உள்ள விதிமுறைகளை தளர்த்தி அவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலைப்பராமரிப்பு பணிகளை தனியார் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 28ம் தேதி சென்னையில் முதன்மை இயக்குனர் அலுவலக வளாகத்தில் சாலைப்பணியாளர்கள் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்ய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   இந்த போராட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் உள்ள சாலை பணியாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டகிளை துணை தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

Related Stories: