குன்னூர், மே 24: குன்னூர் காட்டேரி பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பொது மக்கள் அவதியடைந்துவருகின்றனர். குன்னூர் அருகேயுள்ள காட்டேரி பகுதி மஞ்சூர், அப்பர் பவானி, சேலாஸ், கொலக்கம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. வெளியூரிலிருந்து வரக்கூடிய பயணிகள் காட்டேரி பகுதியில் இருந்து தங்களது கிராமங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் காட்டேரி பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பொது மக்கள் கடும் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வரக்கூடிய பயணிகள் தங்களது கிராமங்களுக்கு செல்லும் பஸ் வரும் வரை காத்திருக்கும் சூழல் உள்ளது. எனவே காட்டேரி பகுதியில் பயணியர் நிழற்குடை அமைத்து தர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.