கொடைக்கானல், மே 23: கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி பரவசமடைந்தனர். கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ளது ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டு திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல்நாளில் காவல்துறை சார்பில் மண்டகப்படி நடைபெற்றது. தொடர்ந்து கேசிஎஸ் பணியாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், அந்தோணியார் கோயில் தெரு மக்கள் சார்பில் மண்டகப்படிகள் நடைபெற்றன. இரண்டாவது நாளான மே 14ல் ஆனந்தகிரி 1, 3, 5, 6, 7 ஆகிய தெருக்களில் அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல்வேறு தரப்பின் சார்பில் மண்டகப்படிகள் நடைபெற்றன.