அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்க ராசிபுரம் ரயில்வே மேம்பாலத்தில் சென்டர்மீடியன் அமைக்க கோரிக்கை

ராசிபுரம்,மே 23: ராசிபுரம் ரயில்வே மேம்பாலத்தில் சென்டர்மீடியன் அமைக்காததால், தாறுமாறாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. சேலம்-நாமக்கல் ரயில் பாதை, ராசிபுரம் வழியாக செல்கிறது. இதையடுத்து ராசிபுரம்- சேலம் மற்றும் ராசிபுரம்  நாமக்கல் சாலைகளில் 2 இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு மேம்பாலங்கள் மிகவும் குறுகலாகவும்,  அபாயகரமான வளைவுகளையும் கொண்டுள்ளன. ரயில்வே மேம்பாலத்தின் மீது டூவீலர் முதல் பஸ், லாரி என கனரக வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் வந்து செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும், பாலத்தின் மேலே எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மேடு பள்ளமாக உள்ளது. பாலத்தில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க, சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மாறாக இரும்பு தடுப்புகளை ஒரு சில இடத்தில் வைத்துள்ளனர். இதை இரவு நேரத்தில் வரும் கனரக வாகனங்கள் மோதி, கீழே தள்ளி விட்டு சென்று விடுகின்றன. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில், கான்கிரீட் சென்டர்மீடியன் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: