பாடாலூர், மே 23: ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பெரம்பலூர்- துறையூர் சாலையில் பொதுமக்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர் .ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி குடிநீர் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு பகுதிக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லையென கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியை பொதுமக்கள், துறையூர்- பெரம்பலூர் சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் மற்றும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் துறையூர்- பெரம்பலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.