திருச்செங்கோடு, மே23: திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம் பீமரப்பட்டி கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் போர்வெல் அமைத்து, அடிபம்பு பொருத்தினர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அடிபம்பு பழுதடைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் தண்ணீர் தேடி, காலி குடங்களுடன் விவசாய கிணறுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த அடிபம்பை சரி செய்யக்கோரி, பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கோடையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு, பழுதடைந்த போர்வெல்லை சீரமைக்க ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.