கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கைது

கிருஷ்ணகிரி, மே 23: கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகளை மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹3.40 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம், பர்கூர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை மர்மநபர்கள் வழிமறித்து, செல்போன்களை பறித்துச் செல்வதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, பர்கூர் டிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்ஐ செந்தாமரைசெல்வி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று தனிப்படை போலீசார் பிஆர்ஜி மாதேப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும் வகையில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, போலீசார் கந்திக்குப்பம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் செல்பவர்களிடம் மிரட்டி செல்போன்கள் பறித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, செல்போன் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி நகர் திருவண்ணாமலை சாலையை சேர்ந்த இம்ரான்(21) மற்றும் 3 சிறுவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ₹3.40 லட்சம் மதிப்புள்ள 40 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: