அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம், மே 23:காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் கடந்த 48 ஆண்டுகளாக லாபகரமாக செயல்படுகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் நிர்வாக குழுவினர் ₹2.34 கோடி முறைகேடு செய்துள்ளதாக தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியானது. இதைதொடர்ந்து, துணிநூல் கைத்தறித் துறை இயக்குநர் முனிநாதன் உத்தரவின் பேரில் விசாரணை அதிகாரியாக சாரதி சுப்புராஜ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்றது.பின்னர், நிர்வாகக் குழு தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் விசுவநாதன், இயக்குநர் சுந்தரமூர்த்தி உள்பட 7 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உண்மை என கைத்தறி துணிநூல் துறைக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கைத்தறித்துறை துணை இயக்குநர் செல்வம் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேருக்கு நோட்டீஸ் வழங்கினார். மேலும் நிர்வாக இயக்குநர் பிரகாஷ் மற்றும் சங்க கணக்காளர் ரவி ஆகியோரை மார்ச் 30ம் தேதி முதல் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையொட்டி, ஏப்ரல் 23ம் தேதி சங்கத் தலைவர் செல்வராஜை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.கடந்த மே 3ம் தேதி துணைத் தலைவராக இருக்கும் விஜயா மதிவாணன் என்பவருக்கு தலைவர் பொறுப்பு வழங்கி, தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநர் பரிந்துரையின் பேரில், காஞ்சிபுரம் கைத்தறி துறை இணை இயக்குநர் செல்வம் உத்தரவிட்டார்.இதற்கிடையில் சங்கத்தில் திமுக சார்பில் இயக்குநராக இருக்கும் லோகநாதனை, அதிமுக இயக்குநர் விஸ்வநாதன் சில நாட்களுக்கு முன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லோகநாதன் விஷ்ணுகாஞ்சி போலீசில், புகார் அளித்துள்ளார்.இந்நிலையில், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேற்று காலை வழக்கறுத்தீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் தலைமை அலுவலகம் முன்பு திடீரென திரண்டனர். பின்னர் அங்கு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது,  ஊழல் செய்த இயக்குநர்கள் விஸ்வநாதன், வரதராஜன், காமாட்சி ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நடத்தினர்.  தகவலறிந்து காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன், சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். அப்போது, நாளை வாக்கு எண்ணிக்கை மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் தேர்த் திருவிழா நடைபெற உள்ளதால் போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து நெசவாளர்கள் கலைந்து சென்றனர். நெசவாளர்களின் இந்த திடீர் உள்ளிருப்பு போராட்டத்தால் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: