புளியங்குடி, மே 23: புளியங்குடியில் சாலையின் நடுவே காணப்படும் மின் கம்பங்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி திறப்பதற்கு முன் மின் கம்பங்கள் அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். புளியங்குடி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள். 11வது வார்டு இந்திராநகரில் சுமார் 500 குடியிருப்புகள் உள்ளன. பெரிய தெரு இலந்தைகுளம் அருகேயுள்ள நுழைவுவாயில் பகுதியில் 2 மின் கம்பங்கள், சாலையின் மைய பகுதியில் காணப் படுகின்றன. இதனால் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதேபோல் திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல நேரிட்டால், வாகனங்கள் தங்கள் பகுதியில் வரமுடியாததால் பொதுமக்கள் நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாக காணப்படும் மின் கம்பங்களை மாற்ற அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முன்பு மக்கள் தொகை மற்றும் வாகன போக்குவரத்துகுறைவு என்பதால் பெரியஅளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் தற்போது பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் மைய பகுதியில் காணப்படும் 2 மின் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் மைய பகுதியில் காணப்படும் மின் கம்பங்களையும் உடனடியாக அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.