ஆற்காடு, மே23: ஆற்காடு அருகே திரவுபதியம்மன் கோயில் திருவிழாவின்போது 2 பெண்களிடம் 6 சவரன் தங்கச்செயினை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர். ஆற்காடு ரத்தினகிரி அருகே உள்ள பூட்டுதாக்கு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, விழாவை காண பூட்டுத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்ம நபர்கள் கீழ்மின்னல் கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பவரின் 2 சவரன் தங்க செயின் மற்றும் பூட்டுதாக்கு பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவரது 4 சவரன் தங்க செயினை திருடி சென்றுள்ளனர். திருவிழா முடிந்ததும் கழுத்தில் நகை இல்லாததை பார்த்த 2 பெண்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, ரத்தினகிரி போலீசில் நேற்று முன்தினம் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்