கிருஷ்ணகிரி, மே 22: பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்ய, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு நாளைக்குள்(23ம்தேதி)விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் www.scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.