ஆண்டிபட்டி, மே 22: ஆண்டிபட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்கள் வறட்சியால் காய்ந்து வருகிறது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். ஆண்டிபட்டியை சுற்றியுள்ள கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி கணவாய்ப்பட்டி, தெப்பம்பட்டி, ராஜதானி பழையகோட்டை, கதிர்நரசிங்கபுரம், வரதராஜபுரம், டி.சுப்புலாபுரம், ஏத்தகோயில், கோவில்பட்டி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர். இப்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் ஆழ்துளை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்து விட்டதால் பல நூறு தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது. இதனால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.