முத்துப்பேட்டை, மே 22: முத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகில் மாதக்கணக்கில் குவிந்து கிடந்த குப்பைகள் தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டன. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளி வாசல் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் பள்ளிவாசல் மதரஸா பின்புறம் கோரையாறு கரை முன் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடந்தது. முன்பு வாரத்தில் ஒருநாள் இப்பகுதியை பேரூராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து வந்த நிலையில் தற்போது மாதக்கணக்கில் மாறி அது வருடக்கணக்கில் தான் சுத்தம் செய்யும் நிலைமை வந்து கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர் நாற்றம் வீசி வருவதுடன் அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத சூழ்நிலையும் உருவானது. மேலும் தொற்றுநோய்களும் பரவி வருவதுடன் இதில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களை துன்புறுத்தி வருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை எடுத்து சென்றும் அகற்ற முன்வரவில்லை. இதனால் நாளுக்குநாள் அதிகளவில் குப்பைகள் கழிவுகள் அதிகமாகி மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.