பட்டுக்கோட்டை, மே 22: பட்டுக்கோட்டை தபால் நிலைய சாலையில் ஓராண்டுக்கு மேலாக நகராட்சி பொது கழிவறை கட்டிடம் பூட்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகி–்ன்றனர். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலைய சாலையில் நகராட்சி சார்பில் பொது கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த கழிப்பிடம் துவங்கிய காலத்திலிருந்து கட்டண கழிப்பிடமாக இருந்து பின்பு இலவச கழிப்பிடமாக மாற்றப்பட்டது. இந்த கழிப்பிடத்தை ஆரம்பித்ததில் இருந்தே பொதுமக்களும், குறிப்பாக சிறிய தனியார் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்கள் மற்றும் ஆண்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த கழிப்பிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் தினசரி பொதுமக்களும், சிறிய வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கழிப்பிடம் பூட்டப்பட்டிருப்பதால் தினசரி கழிப்பிடத்தின் வெளியிலேயே திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் அவலமும் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் ஒருவிதமான துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழல் மாசுபட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் இந்த கழிப்பிடத்தின் பின்புறம் தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் பலர் முகம் சுளிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஓராண்டுக்கு மேலாக பூட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும். குறிப்பாக நகராட்சி சார்பில் ஒரு தொழிலாளரை நியமித்து தினசரி பராமரித்து இலவச கழிப்படமாக தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.