தேசிய மீனவர்கள் சேமிப்பு திட்டத்தில் பெயர்களை சேர்க்க மீனவ பெண்கள் மனு

ராமநாதபுரம், மே 22: மண்டபம் யூனியனில் மானாங்குடி ஊராட்சியில் கடுக்காவலசை, சூரங்காடு வலசை, சின்ன உடையார் வலசை உள்பட பல ஆகிய கிராமங்கள் உள்ளன.  கடந்த நான்கு வருடங்களாக தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் புதுமடம் மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நிவாரண தொகை பெற்று வந்துள்ளனர். கடந்தாண்டு நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என ராமநாதபுரம் மீன்வளத்துறை அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

மனுவில், ராமநாதபுரம் அருகே புதுமடம் மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ.1,700 செலுத்தி அரசு வழங்கி வரும் ரூ.4,500 நிவாரணத் தொகையை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 2017-18ம் ஆண்டுக்கான சேமிப்பு தொகையை அக்டோபர் மாதம் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பாத்திமா கனியிடம் செலுத்தியுள்ளனர். நவம்பர் மாதம் மீன்வளத் துறை மூலமாக நிவாரணத் தொகை உறுப்பினர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.

இதுகுறித்து தலைவரிடம் கேட்டதற்கு விடுபட்ட அனைவருக்கும் சிறிது நாட்களில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறினார். இதே பதிலை தொடர்ந்து கூறியதால் மீன்வள துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று நிவாரணத் தொகையை கேட்டோம். அதிகாரிகள் எங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். பெயர் நீக்கம் குறித்து தலைவரிடம் முறையிட்டபோது உங்களுடைய பெயர்களை நான்தான் சேர்த்தேன். நான்தான் நீக்கினேன் என கூறினார்.

மூன்று மாதத்திற்கு பின் எங்களின் சேமிப்பு தொகையை மட்டும் திரும்ப கொடுத்து விட்டார். வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் மீனவர்களான எங்களின் நலம் கருதி மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் உள்ள 41 பேரின் பெயரை சேர்த்து நிவாரணத் தொகை கிடைக்க செய்ய வேண்டும் என மனு அளித்தோம். மனுவை பெற்றுக்கொண்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் மண்டபம் ஜெயகுமார்  மனுவைப் பரிசீலித்து மீண்டும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாக மனு அளித்தவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: