முட்புதருடன் குண்டும் குழியுமான சாலையில் டூவீலர்கள் கூட செல்ல முடிய வில்லை 10 கிராம மக்கள் குமுறல்

சாயல்குடி, மே 22: கடலாடியிலிருந்து கோவிலாங்குளம் செல்லும் சாலை முட்புதர்கள் நிறைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு 10 கிராம பொதுமக்கள் அவதிபட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். கடலாடியிலிருந்து கோவிலாங்குளம் வழியாக கமுதி செல்ல சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலை உள்ளது. இச்சாலை அமைக்கப்பட்டு சுமார் 15 வருடங்களாக மராமத்து செய்யாமல் இருந்தது. கடந்தாண்டு சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மலட்டாறு பாலம் வரை மட்டுமே புதிய சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள மோயங்குளம் முதல் கொம்பூதி வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கடலாடி-முதுகுளத்தூர் சாலையிலிருந்து கோவிலாங்குளம் வரை செல்லும் இச்சாலையை மங்களம், ஆப்பனூர் தெற்கு கொட்டகை, கொம்பூதி,      காத்தாகுளம், மோயங்குளம், ஆரைக்குடி, ஒச்சதேவன்கோட்டை, பறையங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து குண்டும், குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அவலநிலை உள்ளது.

மேலும் இச்சாலையின் வழியாக கமுதியிலிருந்து கடலாடிக்கு ஒரே ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. சாலை சரியில்லாததால் அப்பேருந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு நிறுத்தப்படுவதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடலாடி மற்றும் கமுதி செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

சாலையில் சைக்கிள்கள் கூட செல்ல முடியாத நிலை இருப்பதால் மாணவர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் நடந்து வருகின்றனர். எனவே இச்சாலையில் இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேலமர முள்செடிகளை அகற்ற வேண்டும். குண்டும், குழியுமான சாலையில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி கிராமமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: