நாகை, மே22: நாகை பகுதியில் டாஸ்மாக் பாரில் தரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் பாரில் தரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக நாகை சப்-கலெக்டர் கமல் கிஷோருக்கு புகார்கள் வந்தது. நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலரின் தொலைபேசி எண்ணை வழங்கி இந்த புகார்களை தெரிவிக்கும்படி சப்-கலெக்டர் கூறினார். இதையடுத்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தொலைபேசி வழியே நேற்று முன்தினம் இரவு புகார்கள் வந்தது. புகார் தெரிவித்த டாஸ்மாக் பாருக்கு நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு நடத்தினார். அப்பொழுது அங்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. அதில் உணவு பாதுகாப்புத்துறை உரிம எண் உள்ளிட்ட தயாரிப்பு விபரங்கள் இருந்தன. அதேநேரம் சில பாட்டில்களில் சீல் இல்லாமல் இருந்தது.